V-Force குழுவினருக்கு உயிர் பாதுகாப்பு பயிற்சி

by Staff Writer 01-02-2020 | 8:44 PM
Colombo (News 1st) V-Force குழுவினர் இன்று முற்பகல் கல்கிசை கடற்பகுதியில் உயிர் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். தேசிய உயிர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் அமைப்பு ஆகியனவும் இதில் இணைந்துகொண்டன. நீர்த்தேக்கங்களில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது, அனர்த்த பாதுகாப்பு குழாத்தினருக்கு உறுதுணையாக செயற்படும் நோக்கில் V-Force குழாத்தினருக்கு பயிற்றுவிக்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய உயிர் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டலின் கீழ் இந்த பயிற்சி இடம்பெற்றதுடன், அதன் தலைவர் அசங்க நாணயக்கார உள்ளிட்ட உயிர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர். நீர் நிலைகளை அண்மித்துள்ள நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர்களும் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். இதன்போது, உயிர் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், செயன்முறை பயிற்சிகளும் இடம்பெற்றன. அனுபவமிக்க உயிர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடலில் கப்பல் கவிழும்போது செயற்படும் முறை தொடர்பில் இதன்போது ஒத்திகை இடம்பெற்றது. முதல் தரத்திலிருந்து உயிர் பாதுகாப்பு பயிற்சியை பெற்றுக்கொண்ட V-Force உறுப்பினர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.