by Staff Writer 01-02-2020 | 7:13 PM
Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரில் இருந்து மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்த மூன்றாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உயர்மட்ட இராஜதந்திர உறவு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் தற்போதைய அரசாங்கம் மீது சீனா கொண்டுள்ள நம்பிக்கை என்பவற்றினால் அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர முடிந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகம், வௌிவிவகார அமைச்சு, பீஜிங்கிலுள்ள இலங்கைக்கான தூதரகம், கொழும்பிலுள்ள சீன தூதரகம், சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கை இராணுவம் மற்றும் விமானப் படையினர் மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலனாக இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வுஹானில் இருந்து மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தோரில் சிறுவர்கள் நால்வரும் அடங்குகின்றனர். அவர்கள் அனைவரும் பூரண மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல் நிலை தொடர்பிலான மதிப்பீட்டின் பின்னர் தியத்தலாவை இராணுவ முகாமின் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதியின் ஆலோசனைக்கமைய 72 மணித்தியாலங்களுக்கு தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் மருத்துவர்கள் குழு மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் மாணவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அடுத்த 14 நாட்களின் பின்னர் மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.