மஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல அனுமதி

மஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 31-01-2020 | 3:31 PM
Colombo (News 1st) சேவை நிமித்தம் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை வௌிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. பிரதிவாதியான மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை வழங்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், வௌிநாடு செல்வதற்கு பிறப்பிக்கப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ரத்னபிரிய குருசிங்க, சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோவும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.