வெடிபொருட்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் வெடிபொருட்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

by Staff Writer 31-01-2020 | 3:46 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. குறித்த வீட்டில் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் சகோதரர் தங்கியிருந்ததாகவும் அவர் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் நிக்கவெரட்டிய பகுதியை சேர்ந்த 6 பேர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், நான்கு பேர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையோர் நிக்கவெரட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.