சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

by Staff Writer 31-01-2020 | 6:49 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு களமிறங்கவுள்ளன என்பது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பிலான கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச்செயலாளர் வௌிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளமையால் கூட்டம் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் தனித்து சொந்த சின்னத்தில் முற்போக்கு தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என மனோகணேசன் ஏற்கனவே தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற ரீதியில் முடிவு எட்டப்படும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதகிருஷ்ணன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட ரீதியாக ஆராய்ந்து வருவதாகவும் இதுவரை எதுவித முடிவும் எட்டப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் கூறினார்.