இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் மத்தியபிரதேஷ்

இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட மத்திய பிரதேஷ் அரசு நிதி ஒதுக்கீடு

by Staff Writer 31-01-2020 | 8:34 PM
Colombo (News 1st) காங்கிரஸ் தலைமையிலான மத்திய பிரதேஷ் அரசு இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இலங்கையில் சீதை கோவில் நிர்மாணம் தொடர்பில மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் தலைமையில் அண்மையில் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து, இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவிலின் மாதிரி வரைபடம், நிதி உள்ளிட்ட விபரங்களை உடனடியாக தயாரித்து வழங்குமாறு உரிய தரப்பினருக்கு முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன. தேவைப்படும் நிதியை இந்த நிதியாண்டிலேயே ஒதுக்குவதற்கும் முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். இந்த கோவிலின் நிர்மாணப்பணிகளை மத்திய பிரதேச அரசு, இலங்கை அரசு மற்றும் மகாபோதி சங்கத்தினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன், உத்தரபிரதேஷின் சாஞ்சியில் புத்தர் அருங்காட்சியகம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அமைப்பது குறித்தும் அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியாவிலுள்ள சீதை அம்மன் கோவிலை புனரமைப்பதற்கு இந்திய மத்திய பிரதேச அரசு நிதி உதவி வழங்கவுள்ளதாக கடந்த 17ஆம் திகதி தினத்தந்தி செய்தி வௌியிட்டிருந்தது. நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு இந்திய மத்திய பிரதேச அரசு 5 கோடி இந்திய ரூபா வழங்கவுள்ளது. இந்திய மத்திய பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.