1000 ரூபா கொடுக்காத தோட்டங்களை அரசு பொறுப்பேற்கும்

1000 ரூபா சம்பளம் கொடுக்காத தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் - பந்துல குணவர்தன

by Bella Dalima 30-01-2020 | 7:16 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை கொடுக்கத் தவறும் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இத்தகவலைஅமைச்சரவை பேச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்தனவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் இன்று செய்தி வௌியிட்டிருந்தது. இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் வழங்கியுள்ள சிபாரிசு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் ஆராய்ந்து வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அதன்பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்ட முறையொன்றுக்கு செல்ல வேண்டும் எனவும், அதற்கான பிரேரணையை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவப் பணிப்பாளரும் முதலாளிமார் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான ரொஷான் ராஜதுறை அண்மையில் தெரிவித்திருந்தார். சம்பளப் பிரச்சினை தொடர்பில் அவிசாவளை - சாலாவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன கருத்துத் தெரிவித்தார். இதன்போது,
தொழிலாளர்கள் வாழ்வதற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தொழில் அமைச்சர் என்ற வகையில் கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிப்பதற்கான செயன்முறைக்கு அரசாங்கம் ஆதரவளித்து சம்பள அதிகரிப்பினை அறிவித்துள்ளது
என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். இந்த நிலையில், 1000 ரூபாவை கட்டாயம் பெற்றுக்கொடுப்பேன் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.