கொரோனா வைரஸ் தொற்று: சந்தேகிக்கப்படும் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 30-01-2020 | 1:01 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் IDH எனப்படும் கொழும்பு நோய் தொற்றியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, நோய்த் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட ஐவர் நேற்று வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளனர். இவர்களின் இரத்த மாதிரிகளை சோதனைக்குட்படுத்தியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, சீனாவில் வசித்த மேலும் சிலர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். ஷங்காய் மற்றும் பீஜிங் நகரங்களில் வசித்த இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, சீனாவில் வசிக்கும் மேலும் சில இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.