மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அறிவுறுத்தல்

மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தல்

by Staff Writer 28-01-2020 | 6:57 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண்ணொருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாட்டில் பரவாதிருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றும் பட்சத்தில் தொற்று பரவுவதைத் தடுக்க முடியும். அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை
என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸினால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு அச்சப்படவோ அல்லது தடைகளோ தேவையில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் நாட்டிற்கு வருகை தரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.