சபாநாயகரை சந்திக்கும் சட்டமா அதிபர்

சபாநாயகரை சந்திக்கும் சட்டமா அதிபர்

by Staff Writer 28-01-2020 | 2:02 PM
Colombo (News 1st) சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு இடம்பெறும் தினம் அல்லது நேரம் குறித்து குறிப்பிட முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய கைது செய்யப்படுவதற்கு விடுக்கப்பட்ட உத்தரவு தொடர்பில், சட்டமா அதிபர் இதன்போது சபாநாயகரிடம் தௌிவுபடுத்தவுள்ளார். அரசியலமைப்புப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டி கைது செய்யப்பட்டமை தொடர்பில், சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவு தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறித்த பேரவையின் உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினால் நீதிமன்றம் தொடர்பில் பொதுமக்களுக்குள்ள நம்பகத்தன்மை அற்றுப்போகும் சாத்தியம் உள்ளதாக அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வாறான உத்தரவினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் நீதிபதிகளின் தொழில் கௌரவத்திற்கு அழுத்தம் ஏற்படுவதாகவும் அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.