கொரோனா பரிசோதனைக்கு 11 வைத்தியசாலைகளில் ஏற்பாடுகள்

கொரோனா வைரஸ் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள 11 வைத்தியசாலைகளில் ஏற்பாடு

by Staff Writer 28-01-2020 | 1:07 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு IDH வைத்தியசாலை தவிர்ந்த நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வட கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அநுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நோயாளர்களை அனுமதித்து தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, சீனாவின் வுஹானிலிருந்து நாட்டிற்கு வருகைதரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் தியத்தலாவையில் 2 கிழமைகளுக்கு தடுத்துவைத்து கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் தௌிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனைத்தவிர கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 , 011 3071073 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.