ஆணைக்குழுக்கள் மூலம் வழக்குகளைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுமந்திரன் தெரிவிப்பு

by Staff Writer 28-01-2020 | 8:44 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, வசந்த கரன்னாகொடவையும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தசநாயக்கவையும் வழக்கிலிருந்து விடுதலை செய்யும்படி சிபாரிசு செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிவித்தல் விடுத்திருப்பது மோசமான ஒரு அரசியல் தலையீடு என சுமந்திரன் குறிப்பிட்டார்.
சட்ட மா அதிபர் முன்னெடுத்த ஒரு வழக்கைக் கூட ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்து தடுப்பற்கான முயற்சி நடைபெறுகிறது. ஜக்கிய நாடுகளுக்கும் மற்றைய வௌிநாடுகளுக்கும் காண்பிப்பதற்காக ஒரு கண்துடைப்பு நாடகமாக 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தை மட்டும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. சட்ட மா அதிபரும் அதனை முன்னெடுத்திருந்தார். மற்ற விடயங்கள் செய்யப்படாமல் இருந்த போதிலும் கூட இந்த ஒரு விடயமாவது சரியாக நடக்கிறதா என்று நாங்கள் அவதானித்துக்கொண்டிருந்தோம். தற்போது பதவிக்கு வந்திருக்கின்ற அரசாங்கம் அதனை உடனடியாக நிறுத்துவதற்கான ஒரு மோசமான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. ஆணைக்குழுவை வைத்து இப்படியான செயற்பாடுகளை செய்வது சட்ட விரோதமான செயற்பாடு, இதற்கு எதிராக நாங்கள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்போம்
என சுமந்திரன் தெரிவித்தார்.