சீனாவிலிருந்து இலங்கை மாணவர்கள் நாட்டிற்கு வருகை

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 27-01-2020 | 7:10 PM
Colombo (News 1st) சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் டியான்ஜின் நகரிலிருந்து இன்று (27) மதியம் 21 இலங்கை மாணவர்கள் இலங்கை நோக்கி பயணமாகியுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அழைத்துவரும் நடவடிக்கையை ஜனாதிபதி செயலகம், வௌிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை இணைந்து முன்னெடுப்பதாக அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது. சிச்சுவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விமான நிலையம் வரை பஸ்ஸின் மூலம் மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றினால் முடங்கியுள்ள வுஹான் பிராந்தியத்தில் இருந்து மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.