போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு மரண தண்டனை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு மரண தண்டனை

by Staff Writer 26-01-2020 | 1:31 PM
Colombo (News 1st) ​பேர்சியன் (Persian) வளைகுடாவின் முதலை என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த நபரின் போதைப்பொருள் வலையமைப்பும் கலைக்கப்பட்டுள்ளது. 100 தொன்னுக்கும் அதிகமான போதைப்பொருளை சர்வதேச கடற்பரப்பில் வைத்து, பரிமாற்றிக்கொண்டிருக்கையில் அவர் கைது செய்ய்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையைத் தொடர்ந்தே 36 வயதான போதைப்பொருள் கடத்தல்காரரும் அவரது உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் 2017 ஆம் ஆண்டில் 507 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டில் 253 பேருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை திருப்தியடைந்துள்ளது. அத்துடன் ஈரானின் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களுக்கும், சர்வதேச மன்னிப்புச்சபை பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.