கொரோனா வைரஸ்: சீன ஜனாதிபதியின் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் பரவல் தொடர்பில் சீன ஜனாதிபதியின் எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 26-01-2020 | 9:17 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாட்டில் அவதானமிக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாக சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 1,400 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் சீனாவில் புது வருடமான Lunar புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டதுடன் இதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் மலேஷியாவில் வைரஸ் தொற்றுடன் கூடிய 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் முதலாவதாக பிரான்ஸிலேயே கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார். கனடாவிலும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுஹான் நகரிலிருந்து கனடா வந்த ஒருவரே வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வைரஸ் தொற்றினால் ஹொங்கொங்கில் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Lunar புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட ஹொங்கொங் பாடசாலைகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சீனாவின் வுஹான் நகரிலுள்ள தமது பிரஜைகயைும் இராஜதந்திரிகளையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இன்று விமானமொன்றை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது தற்போது தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, தாய்வான் நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.