மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கான பாதுகாப்பு மத்திய நிலையம் திறந்து வைப்பு

by Staff Writer 25-01-2020 | 9:47 PM
Colombo (News 1st) மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கான இலங்கையின் முதலாவது பாதுகாப்பு மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஐந்து பிள்ளைகளில் ஒருவர் சிறு உடல் அல்லது உளநலக் குறைபாட்டை எதிர்நோக்கியுள்ளமை ஆய்வினூடாக வெளிக்கொணரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான பிள்ளைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு உரிய நடவடிக்கையை எடுப்பதனூடாக அவர்களை சமூகமயப்படுத்த முடியும் என்பதுடன், அதற்கான தீர்வினைக் காண்பதற்காக அரச மற்றும் தனியார் பிரிவினரின் பங்களிப்பில் இந்த தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்பில் ஒரு வருடத்திற்குள் இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 55 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்த நிறுவனமொன்று அனைத்து நாட்களிலும் இங்கு சிகிச்சையளிக்கவுள்ளது. உடல் மற்றும் உளநல பாதிப்பிற்குள்ளான ஆரம்பப் பரிசோதனையை மேற்கொள்ளல், பேச்சு, கேட்டல் பயிற்சி உள்ளிட்ட பல சேவைகள் இங்கு வழங்கப்படவுள்ளன.