கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் ததேகூ ஆராய்வு

பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆராய்வு

by Staff Writer 24-01-2020 | 9:12 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் நேற்று கூடி ஆராய்ந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவரசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பில் களமிறங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு கிளை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவரசா தெரிவித்தார். இதன்போது, கொழும்பில் போட்டியிடுகின்ற சிறுபான்மை கட்சிகளை பாதிக்காத வகையில் செயற்படவேண்டு என்ற நிலைப்பாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். எவ்வாறாயினும் கொழும்பில் போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் இந்த மாத இறுதிக்குள் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என அவர் தெரிவித்தார்.