சட்ட மா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

சட்ட மா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் சாத்வீகப் போராட்டம்

by Staff Writer 24-01-2020 | 8:09 PM
Colombo (News 1st) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று பகல் கூடிய சட்டத்தரணிகள் சிலர் சட்ட மா அதிபருக்கு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்திலுள்ள சட்டத்தரணிகள் இந்த சாத்வீக கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளை வேட்டையாடுவதற்கு முயற்சிக்கின்றனர். கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் கைது செய்யும் நடவடிக்கையை சட்ட மா அதிபர் முன்னெடுக்க வேண்டியதில்லை. ஆலோசனை வழங்குவது சட்ட மா அதிபரின் பொறுப்பு. இது அரசியல் விடயமல்ல. சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பிற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தீர்ப்பளித்த பின்னர் சட்ட மா அதிபர் திணைக்களம் அதனை பாரியளவில் விமர்சிக்கின்றது. அந்த உரிமை சட்டத்தரணிகளுக்கும் உள்ளதென நான் நம்புகின்றேன். இதற்கமைய, இந்த வேட்டையை உடனடியாக நிறுத்துமாறு சட்டத்தரணிகள் சமூகத்தின் சார்பில் நாம் கூறுகின்றோம்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாட இரண்டு குழுக்களை நியமித்துள்ளதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேலும் குறிப்பிட்டார்.