எழுதுமட்டுவாழ் கொலை: கைதான இருவருக்கு விளக்கமறியல்

யாழ். எழுதுமட்டுவாழ் கொலைச் சம்பவம்: கைதான இருவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 23-01-2020 | 6:00 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் வடக்கு, படித்த மகளிர் திட்டப் பகுதியிலுள்ள குறுக்கு வீதி அருகிலிருந்து நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 52 வயதான ஆணொருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் எழுதுமட்டுவாழ் வடக்கு, படித்த மகளிர் திட்டத்தில் வசித்து வரும் 36 வயதான பெண் ஒருவரும் வேறு பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின்பேரில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.