1 கிலோ நெல்லை 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய அனுமதி

ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

by Staff Writer 23-01-2020 | 6:48 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதனடிப்படையில், ஈரலிப்பான நெல் ஒரு கிலோகிராமின் விலை 45 ரூபாவாகும். அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் மூலம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்போக நெல் அறுவடை தற்போது இடம்பெற்று வருவதுடன், இம்முறை மூன்று மில்லியன் மெட்ரிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது. கொள்கை ரீதியாக வௌிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பாடமையினால், விலை அதிகரித்தாலும் அதனூடாக 100 மில்லியன் டொலர் அந்நியச்செலாவணி மீதமாகியதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஸ அமைச்சரவையில் யோசனையை முன்வைத்திருந்தாலும் ஈரப்பதமான நெல்லின் அளவு தொடர்பில் கவனத்தில் கொண்டு ஒரு கிலோ சம்பா நெல்லிற்கு குறைந்தபட்சம் 50 ரூபாவை நிர்ணய விலையாக விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். நிர்ணய விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்வதற்காக தனியார் துறையினருக்கு 8 வீத சலுகைக் கடன் அடிப்படையில் கடன் வழங்குவதற்கு அமைச்சர் யோசனை முன்வைத்துள்ளார்.