தபால்மூல வாக்களிப்பு சட்டத்தை மாற்றத் தீர்மானம்

ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் 

by Staff Writer 23-01-2020 | 8:03 AM
Colombo (News 1st) தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டத்தை திருத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்தியவசிய சேவைகளில் பணிபுரிவோருக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குதவற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்கீழ், தனியார் பிரிவுகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அத்தியவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டவுள்ளது. இதன்பிரகாரம், ஒரு வாரத்திற்கு முன்னர் வாக்களிப்பதற்கு சந்தரப்பம் வழங்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிப்பதும் புதிய சட்ட திருத்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளது. குறித்த சட்டத்திருத்தங்களை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.