இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 23-01-2020 | 2:30 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 6ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை - திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இனியபாரதி என்றழைக்கப்படுகின்ற குமாரசாமி புஸ்பகுமார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகிய இடங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலரை கடத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் இனியபாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.