ரிஷாட் பதியுதீனின் சகோதரருக்கு விளக்கமறியல்

ரிஷாட் பதியுதீனின் சகோதரருக்கு விளக்கமறியல்; பிணை கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 23-01-2020 | 5:09 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரிப்கான் பதியுதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ரிப்கான் பதியுதீன் இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். தலைமன்னார் பகுதியிலுள்ள காணியொன்றை போலி ஆவணங்கள் தயாரித்து ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரான ரிப்கான் பதியுதீனை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார். எந்தவொரு நிபந்தனைகளுடனாவது தமது சேவை பெறுநருக்கு பிணை வழங்குமாறு ரிப்கான் பதியுதீன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மன்றில் கோரிக்கை விடுத்தார். எனினும், சந்தேகநபரைக் கைது செய்து மன்றில் ஆஜராக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, கடந்த 09 ஆம் திகதி சந்தேகநபரின் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்து அவர் தலைமறைவாகியிருந்ததாகவும் கையடக்கத்தொலைபேசி இணைப்பை துண்டித்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்தனர். இதன் காரணமாக சந்தேகநபருக்கு பிணை வழங்கும் பட்சத்தில், விசாரணைக்கு பாதகம் ஏற்படக்கூடும் என்பதாலும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதாலும் பிணை கோரிக்கையை பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.