பயணத்தடையை விரிவுபடுத்தத் திட்டம் - ட்ரம்ப்

அமெரிக்கப் பயணத்தடையை விரிவுபடுத்தத் திட்டம் - ட்ரம்ப்

by Chandrasekaram Chandravadani 23-01-2020 | 10:01 AM
Colombo (News 1st) அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் சிலவற்றை இணைத்துக்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் இடம்பெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் கலந்துகொண்ட அவர், ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட 7 நாடுகளின் பிரஜைகளை அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கும் தீர்மானத்தில், டரம்ப் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திட்டார். இதற்கமைய, லிபியா, ஈரான், சோமாலியா, சிரியா, யேமன், வட கொரியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் சில புதிதாக உள்ளடக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலகில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம், ஆகவே எமது நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் எந்தெந்த நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்படும் என்பதனை உடனடியாகக் குறிப்பிடாத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த நாடுகளின் பட்டியலை விரைவில் அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.