137,000 முதியோர் காத்திருப்புப் பட்டியலில்...

முதியோர் கொடுப்பனவிற்கான காத்திருப்புப் பட்டியலில் 137,000 பேர்

by Staff Writer 22-01-2020 | 10:23 AM
Colombo (News 1st) முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் 70 வயதிற்கு மேற்பட்ட 137,000 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. நிதி ஒதுக்கீடுகள் இன்மையால், முதியோருக்கான கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கொடுப்பனவை செலுத்துவதற்குரிய நிதியை அரசிடம் கோரியுள்ளதாக செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தற்போது 416,667 பேர் முதியோருக்கான கொடுப்பனவை பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதியோருக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான பிரேரணை, சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.