பாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக நீதிமன்றில் ஆஜர்

பாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff Writer 22-01-2020 | 4:42 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான துசித்த திலும்குமார என்பவர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்து மன்றில் ஆஜராகிய பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக பணிபுரிந்த இரண்டாவது சந்தேகநபர் துசித்த திலும்குமார என்பவர் பிற்பகல் 2 மணியளவில் மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறைக்கு அழைக்கப்பட்டார். தனிப்பட்ட விருப்பின் பேரிலா அல்லது எவரினதும் அச்சுறுத்தலின் பேரிலா இரகசிய வாக்குமூலம் வழங்க எதிர்பார்ப்பதாக சந்தேகநபரிடம் வினவிய நீதவான் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளார். இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக உரிய உத்தரவை பிறப்பிப்பதாக மேலதிக நீதவான் அறிவித்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கீத் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.