by Staff Writer 21-01-2020 | 7:03 PM
Colombo (News 1st) மாதாந்தம் சந்தா பணத்தை அறவிடும் தொழிற்சங்கங்களினால் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் விடுக்க முடியாத காரணம் என்னவென பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும், அதிகரிக்கப்படாவிட்டாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் மாதாந்தம் சந்தா பணத்தை அறவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தவறுவதில்லை என பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் 150 ரூபா முதல் 233 ரூபா வரை தொழிலாளர்களிடமிருந்து மாதாந்த சந்தா அறவிடுகின்றன.
சந்தா அறவிடுகின்ற தொழிற்சங்கங்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கொண்டுள்ள கரிசனை போதுமானதாக இல்லை என்பதே மக்களின் கருத்தாகும்.
1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.