by Staff Writer 21-01-2020 | 7:21 AM
Colombo (News 1st) பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இன்று மதியம் ஒரு மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
தெரிவுக்குழுக்கழுக்கான பெயர்ப்பட்டியல் இன்றைய ஒழுங்குபத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சபாநாயகர் தலைமையிலான 17 பேரடங்கிய தெரிவுக் குழுக்களுக்கான பெயர்ப் பட்டியலுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு இன்று முதலாவது தடவையாக உறுப்பினர்களின் வாய்மொழி மூல வினாக்களும் ஒழுங்குபத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சினால் இன்று சில பிரேரணைகளும் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு இன்று கூடவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.