காணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்

காணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்: ஜனாதிபதி

by Staff Writer 21-01-2020 | 6:48 PM
Colombo (News 1st) காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உடனான சந்திப்பின் போது கோட்டாபய ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார். ஐ.நா. வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு தொடர்பில் சாதகமாக பதிலளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வறுமை ஒழிப்பு, காலநிலை, அரச அலுவலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் அகதிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான தமது திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் LTTE இனால் கொண்டுசெல்லப்பட்டவர்கள் அல்லது பலவந்தமாக இணைக்கப்பட்டவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோரின் குடும்பத்தினர் அதற்கான சாட்சி எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் அவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்கள் கூறி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசாரணைகளின் பின்னர் மரணச் சான்றிதழ்களை வழங்க தான் எதிப்பார்ப்பதாக இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதன்பின்னர் காணாமல் போனோரின் உறவினர்கள் தமது வாழ்க்கையை தொடர உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்வு தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலை பயனற்றதாக்கும் என்பதால் அவர்கள் இதனை மறுப்பார்கள் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.