ஏப்ரல்21 தாக்குதல்: 12பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: கைதானோரில் 12 பேரின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

by Staff Writer 21-01-2020 | 3:22 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கல்முனை நீதவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அவர்களை எதிர்வரும் 13 நாட்களுக்கு மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் ஐ.என்.ரிஸ்வான் இன்று உத்தரவிட்டார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து, அவர்கள் இன்று மீண்டும் விசாரணைக்காக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பெண்களும் அடங்குகின்றனர். சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய செய்திகள்