அரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் ஹரி தம்பதி

அரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி

by Staff Writer 19-01-2020 | 1:31 PM
Colombo (News 1st) பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. HRH என குறிப்பிடப்பட்டு பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் அழைக்கப்படுவர். ஹரி மற்றும் மேகன் ஆகியோர் இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக எதிர்வரும் காலங்களில் பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவிலுள்ள அவர்களின் குடும்ப இல்லத்தை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்ஸ்கள் நிதியை ஹரி மற்றும் மேகன் மீள கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளாதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஹரி, மேகன் மற்றும் பேரக்குழந்தைக்கு சிறப்பான வகையில் முழு ஆதரவு அளிக்க தீர்மானிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிஸபெத் தெரிவித்துள்ளார். ஹாரி, மேகன் மற்றும் பேரகுழந்தை ஆகியோர் எப்போதும் தனது குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.