காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம்

காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயன்முறையை தயாரிக்க திட்டம்

by Staff Writer 18-01-2020 | 4:17 PM
Colombo (News 1st) காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் வாழ்வாதார அபிவிருத்திக்காக செயன்முறையொன்றை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமது அரசியல் அபிலாசைகளுடன் முரண்பட்டுள்ளமையினால், தமிழ் அரசியல்வாதிகள் அந்த நடவடிக்கைகளை நிராகரித்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம் மற்றும் அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கம், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கல்வி, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயாரென இதன்போது வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.