அபுதாபியில் உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு

அபுதாபியில் வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

by Staff Writer 18-01-2020 | 3:54 PM
Colombo (News 1st) அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவர்கள் பணியாற்றிய நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய இலங்கையை சேர்ந்த இரண்டு பெண் சிற்றூழியர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவர்களது உடல்களை நாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமெனில் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என குறித்த இரண்டு பெண்களின் குடும்ப உறுப்பினர்களால் கடிதம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு கடிதம் கிடைத்தால் அதனை அபுதாபி அரசிடம் சமர்ப்பிப்பதனூடாக உயிரிழந்த பெண்களின் உடல்கள் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று (17) இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கை பெண்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.