நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு: ஜனாதிபதி​ நடவடிக்கை

by Staff Writer 17-01-2020 | 7:51 PM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எழுந்துள்ள சுற்றாடல் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை , சிலாபம் மறைமாவட்ட ஆயர் உள்ளிட்ட மதத்தலைவர்கள், பிரதேச மக்கள், சூழலியலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. உரிய தொழில்நுட்ப முறைமைகள்,சுற்றாடல் நியமங்களுக்கு அமைய அனல் மின் உற்பத்தி நிலையம் செயற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கும் போது இணக்கம் காணப்பட்ட சுற்றாடல் நியமங்கள் கடந்த காலகட்டத்தில் உரிய முறையில் பின்பற்றப்படாமையினால் சுற்றாடலுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக செயற்றிட்டத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள், அதிகாரிகளை அழைத்து பணிப்புரைகளை விடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள மூன்று கட்டங்களின் கீழ் 990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், நான்காவது கட்டத்திற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் துரித அபிவிருத்திக்கு எரிசக்தி தீர்மானமிக்க காரணியாக அமைவதால், மாற்று எரிசக்தி தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார். 2030 ஆம் ஆண்டளவில் மொத்த எரிசக்தி தேவையின் 80 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியினூடாக உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.