நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்

by Staff Writer 17-01-2020 | 9:01 PM
Colombo (News 1st) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மாதிவெல பகுதியிலுள்ள அவரின் வீட்டை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அண்மையில் சோதனையிட்ட சந்தர்ப்பத்தில், பதிவு செய்யப்படாத துப்பாக்கியொன்றும் 123 ரவைகளும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்காகவே ரஞ்சன் ராமநாயக்க இன்று ஆஜர்படுத்தப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க சார்பில் சட்டத்தரணிகளான உதுல் பிரேமரத்ன மற்றும் ஆஷா கஹவத்த ஆகியோர் ஆஜராகியிருந்தனர். வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை நுகேகொடை நீதவான் வசந்த குமார ஒத்திவைத்தார். இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க நீதவான்களுக்கு அழுத்தம் விடுத்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.