நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு குடியரசுத்தலைவரால் நிராகரிப்பு

by Bella Dalima 17-01-2020 | 5:32 PM
Colombo (News 1st) நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். எனவே, அவரை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கியுள்ளது. நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கினால் இந்திய குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. இந்த கருணை மனுவானது டெல்லி அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர், உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சகத்தின் இந்த கோரிக்கையை ஏற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு திகார் சிறை நிர்வாகம், டெல்லி அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.