கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

by Staff Writer 16-01-2020 | 8:02 PM
Colombo (News 1st) விமானப் பயணிகளுக்கு அசௌகரியங்களோ தாமதமோ ஏற்படாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, விமானப் பயணி ஒருவர் விமான நிலையத்திற்குள் பிரவேசித்து விமானத்திற்குள் உட்பிரவேசிக்கும் வரையிலும், நாட்டிற்கு வருகை தரும் பயணி ஒருவர் வௌியேறும் வரையிலுமான நேரம் மற்றும் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணித்தார். குடிவரவு குடியகல்வு சோதனைகளுக்கு போதுமானளவு அதிகாரிகளை நியமித்து, பயணத்தில் ஏற்படும் தாமதத்தை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், பயணிகளுக்கான வாடகை வாகனங்களுக்கு பதிலாக மற்றுமொரு பிரிவை ஸ்தாபிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.