மூன்று மாணவிகளின் சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன

அஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகளின் சடலங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன

by Staff Writer 15-01-2020 | 3:55 PM
Colombo (News 1st) அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் உயிரிழந்த இலங்கை மாணவிகள் மூன்று பேரின் சடலங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டோஹாவிலிருந்து நாட்டிற்கு வந்த விமானத்தின் மூலம் சடலங்கள் இன்று காலை 9.15 அளவில் கொண்டு வரப்பட்டன. கட்டார் - டோஹாவிற்கான இலங்கை தூதரகம் மற்றும் ஈரானின் தெஹ்ரானுக்கான இலங்கை தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கை அரசின் செலவிலேயே சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அஸர்பைஜானின் பகூவில் உள்ள வெஸ்டர்ன் கெஸ்பியன் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 21, 23 மற்றும் 25 வயதான இலங்கை மாணவிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர். குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக மூன்று மாணவிகளும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றிருந்தனர். மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மின் ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன், இது குறித்து அந்நாட்டு பொலிஸாரும் தீயணைப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.