இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய டியாகோ ஆமை

800 ஆமைகளுக்கு தந்தையாகி இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய டியாகோ

by Bella Dalima 14-01-2020 | 4:22 PM
Colombo (News 1st) 800 ஆமைகளுக்கு தந்தையாகி தனது இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கிறது டியாகோ எனும் 100 வயது ஆமை. ஈக்வடோர் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கலபாகோஸ் தீவில் அழிந்து வரும் இனமாக 'செலோனாய்டிஸ் கூடன்சிஸ்' என்ற இராட்சத ஆமைகள் இனங்காணப்பட்டன. இதனால், குறித்த ஆமை இனத்தைப் பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும் 12 பெண் ஆமைகளையும் தெரிவு செய்தனர். அவற்றில் ஒரு ஆண் ஆமை, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட 'டியாகோ' என்ற ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60. கலபாகோஸ் தீவில் 3 ஆண் ஆமைகளையும் 12 பெண் ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்க நிகழ்வை அதிகாரிகள் நடத்தினர். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. தற்போது, அங்கு 2,000 ஆமைகள் நடமாடுகின்றன. அவற்றில் 800 ஆமைகளுக்கு டியாகோ ஆமைதான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தீவில் உள்ள 40 சதவீத ஆமைகள், டியாகோவின் பிள்ளைகள் ஆவர். இனப்பெருக்க நிகழ்வில் டியாகோ தீவிரமாக பங்கெடுத்து, தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது டியாகோவிற்கு 100 வயது ஆகிறது. அதனால், அதற்கு ஓய்வு கொடுக்கும் வகையில், அதன் பிறப்பிடமான எஸ்பனோலா தீவில் உள்ள காட்டிற்கே அதை அனுப்பி விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் இனிமேல், கலபாகோஸ் தீவில், இராட்சத ஆமைகள் இயல்பாகவே வளரக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.