புதுக்குடியிருப்பு - வேணாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 14-01-2020 | 2:00 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வேணாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி இன்று (14) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. வேணாவில் ஶ்ரீ முருகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு கோரி பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக ஒரே அதிபர் உள்ளதாகவும் பாடசாலை அபிவிருத்தியில் அதிபர் கவனம் செலுத்தாமையால் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. அமரசிங்க மற்றும் முல்லை வலயக்கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். அதிபரின் இடமாற்றம் குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.