by Staff Writer 14-01-2020 | 5:59 PM
Colombo (News 1st) - மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன், காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விடுமுறைக்காக வீடு சென்றிருந்த போது அனுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று (13)
உயிரிழந்துள்ளார்.
இவர் அனுராதபுரம் தலாவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இதேவேளை, டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (12) உயிரிழந்தார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கவனமாக செயற்பட வேண்டும் என மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.