கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

by Staff Writer 14-01-2020 | 1:16 PM
Colombo (News 1st) தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. பலந்த நிபந்தனைகளுடன் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை வழங்கியுள்ளார். தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் செல்ல மாணவர்களுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். மீண்டும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும் நீதவான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரித்துள்ளார். மாணவர்கள் சிலரைத் தாக்கியமை, காயமேற்படுத்தியமை, மனிதாபிமானமற்ற வகையில் செயற்பட்டமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு, கொழும்புப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த​ 7ஆம் திகதி மாலை மோதல் இடம்பெற்றிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த 10ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர், முதலாம் வருட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளும் பொரளையிலுள்ள மாணவர் விடுதியில் வைத்தும் கடந்த சில தினங்களாக பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டாம் வருட மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் தாக்கப்பட்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்