லயன் எயார் விமானத்தில் பயணித்த மற்றொரு பயணி வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 13-01-2020 | 3:17 PM
Colombo (News 1st) லயன் எயார் விமானத்திலிருந்து மேலுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பயணியின் நிலைமையும் கவலைக்கிடமாகவுள்ளதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 70 வயதான இந்தோனேஷியாவை சேர்ந்த முதியவர் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, விமானத்தில் உயிரிழந்த 2 பயணிகளின் சடலங்களும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவைச் சேர்ந்த 64 வயதான ஆணொருவரும் 74 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமான சேவைக்கு உரித்தான பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 2 பயணிகள் சுகயீனமடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த 2 பயணிகளும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா நோக்கி பயணித்த விமானமொன்றே இன்று காலை தரையிறங்கியதாகவும் விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.