கொழும்பு பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பு பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 13-01-2020 | 5:04 PM
Colombo (News 1st) பகிடிவதை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் நாளை (14) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களான மாணவர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மாணவர்கள் சிலரைத் தாக்கியமை, காயமேற்படுத்தியமை, மனிதாபிமானமற்ற வகையில் செயற்பட்டமை மற்றும் மிரட்டல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு, கொழும்புப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த​ 7ஆம் திகதி மாலை மோதல் இடம்பெற்றிருந்தது. இந்த விடயம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடந்த 10ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர், முதலாம் வருட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளும் பொரளையிலுள்ள மாணவர் விடுதியில் வைத்தும் கடந்த சில தினங்களாக பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டாம் வருட மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் தாக்கப்பட்டிருந்தனர். தாக்கப்பட்ட மாணவனின் காதுப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.