விமான விபத்தில் பலியானோருக்கு நீதி கிட்ட வேண்டும்

உக்ரைன் விமான விபத்தில் பலியானோருக்கு நீதி கிடைக்க வேண்டும் - கனேடிய பிரதமர்

by Staff Writer 13-01-2020 | 3:51 PM
Colombo (News 1st) உக்ரைனிய பயணிகள் விமானம் தாக்கப்பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க ​வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 57 கனேடியர்களுக்காக, அல்பேர்டா மாநிலத்தின் எட்மண்டனில் நடத்தப்பட்ட இரங்கல் ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான துன்பியல் சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடாது என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய இராணுவம் இந்தப் பயணிகள் விமானத்தைத் தாக்கியமை தொடர்பில், ஈரானிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் இது தொடர்பாக அவர்கள் பதிலளிக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார். தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைனிய பயணிகள் விமானம் சிறிது நேரத்தில் ஈரானிய இராணுவத்தினால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. இதன்போது விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.