மாணவிகளின் சடலங்களை கொண்டுவர பேச்சுவார்த்தை

அஸர்பைஜானிலிருந்து மாணவிகளின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை

by Staff Writer 12-01-2020 | 1:50 PM
Colombo (News 1st) அஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. ஈரானின் இலங்கைக்கான தூதுவருடன், அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர், விரைவில் குறித்த சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அஸர்பைஜான் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கழைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற 21, 23 மற்றும் 25 வயதான 3 மாணவிகள் நேற்று முன்தினம் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக 3 மாணவிகளும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றிருந்தனர். மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மின் ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன், இது குறித்து அந்நாட்டு பொலிஸாரும் தீயணைப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடுவளை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளே இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களாவர்.