ரஞ்சனின் குரல் பதிவு பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பு

ரஞ்சனின் குரல் பதிவு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைப்பு

by Staff Writer 11-01-2020 | 4:22 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த குரல் பதிவு தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவின் ஒரு பகுதி தமக்கு கிடைத்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குரல் பதிவு தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். இது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.