ரஞ்சன் ராமநாயக்க - நீதிபதிகள் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 10-01-2020 | 7:22 PM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நீதிபதிகளுக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, அந்த தொலைபேசி உரையாடல்களில் அடங்கியுள்ள குரல் பதிவுகள் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பொலிஸார் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. பொலிஸாரிடமுள்ள குரல் பதிவுகள் வேறு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை எனவும், அவை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கைவிரல் அடையாளத்துடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடல்களில் அடங்கியுள்ள குரல் பதிவுகள் தொடர்பிலான பொறுப்பு, நீண்ட காலமாக அதனை வைத்திருப்பவர்களுக்கே உரியது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.