பிரிந்து சென்றவர்களுக்கு சுமந்திரன் மீண்டும் அழைப்பு

by Bella Dalima 10-01-2020 | 8:10 PM
Colombo (News 1st) தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை கூட்டமைப்பில் இருந்துவிட்டு, அடுத்தநாள் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாரும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்ட சுமந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்கள் ஏன் வௌியே போனார்கள் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் கூறினார். எவ்வாறாயினும், எவரையும் தாம் கட்சியிலிருந்து வௌியே அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்களுக்காக கதவுகளைத் திறந்து வைத்திருப்பது மாத்திரமே தமது பொறுப்பு எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.