ஹப்புத்தளை விபத்து: இடைக்கால அறிக்கை கையளிப்பு

ஹப்புத்தளை விமான விபத்து குறித்த இடைக்கால அறிக்கை விமானப்படைத் தளபதியிடம் கையளிப்பு

by Staff Writer 09-01-2020 | 12:07 PM
Colombo (News 1st) ஹப்புத்தளை - ஐஸ்பீலி பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதா என்பதை உரிய வகையில் அறிந்துகொள்வதற்கு முடியாதுள்ளதாகவும் விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் உள்ளிட்ட உதிரிப்பாகங்களை மேலதிக பகுப்பாய்விற்கு உட்படுத்த வேண்டும் என இடைக்கால அறிக்கையூடாக விமானப்படைத் தளபதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் பகுப்பாய்விற்காக கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் பொறியியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. பகுப்பாய்வினூடாக கிடைக்கப்பெறும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விபத்து தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கூறியுள்ளார். விபத்து தொடர்பில் ஆராய்வதற்கு எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோவின் தலைமையில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Y-12 ரக விமானமொன்று கடந்த 3ஆம் திகதி ஹப்புத்தளை - ஐஸ்பீலி பகுதியில் விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர். வீரவிலயிலிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தியதலாவ நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.